பெருநகர் கனவுகள் – 5

சந்திப்பு

- Advertisement -

சந்திப்பு

இன்றவனைச் சந்திக்கலாம்
என வந்து சேர்ந்ததும்
வழக்கமான பொழுதில்
வழக்கமான சாலையில்
காத்திருந்தேன்.

எப்பொழுதுமல்லாது
இரைச்சலும் புகைநெடியுமின்றி
மௌனித்திருந்தது
சீன ‘கொய் தியோ’ கடையின்
எதிர்ப்புறம்.

எப்பொழுதுமல்லாது
அரவமற்று ஓய்ந்திருந்தது
தெருமுனை சந்திப்புகள்.

எப்பொழுதுமல்லாது
பூட்டுக்கடைக்காரனின்
சத்தமும் ஆர்பாட்டமுமின்றி
வெறிச்சோடியிருந்தது கடைவரிசைகள்.

எப்பொழுதுமல்லாது
‘நாசி லெமாக்’ பொட்டலங்கள்
திறக்கப்படாமல்
ஈக்கள் மொய்க்க
மேசையை அலங்கரித்திருந்தன.

எப்பொழுதுமல்லாது
இவற்றிற்கு நடுவில்
அவனுக்குக் காத்திருந்தேன்.

எப்பொழுதும்போல்
யாரென்ற தெரியாத அவனும்
எதற்கு வந்தேன் எனப் புரியாத நானும்
சந்தித்துக் கொள்ளவில்லை.

குறிப்பு:
கொய் தியோ – சீனர்களின் விருப்ப உணவு
நாசி லெமாக் – மலாய்க்காரர்களின் விருப்ப உணவு

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -