யமுனாவீடு – 100

தொடர் கவிதை

- Advertisement -

இறப்பது போல எல்லோரும்
உறங்கிக்கொண்டிருப்பார்கள்
கெட்ட கனவுக்குக்
கண்ணைத் திறந்து பார்த்திடவேண்டும்
எதற்கும் தண்ணீரைக் குடித்துவிட்டு
உறங்கிப்போங்கள்

தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கிறது
அங்கிருந்து நீ பாடிக்கொண்டிருக்கிறாய்
பெரும் கட்டடத்திலிருந்து
நான் இறங்கி நடக்கிறேன்

சத்தமன்றி வண்டிகள்
கடந்துசெல்கின்றன
வெகு தொலைவிலொருவர்
சென்றுகொண்டிருந்தார்
நள்ளிரவில் பூனைகள்
எங்கும் தென்படவில்லை

இருட்டைப்போலவே
துன்பமும் இருக்கிறது
தூரத்திலொரு வெளிச்சப்புள்ளியைத் தேடுகிறோம்
காற்றின் திசைக்குப் பறக்கும் சருகாக
நம்மை பழக்கிக்கொள்ளவில்லை

நமக்குத் தெரிந்த ஒன்றையும்
நமக்குத் தெரியாத ஒன்றையும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
ஒன்றைப்போலவே
தேடிக் கண்டடைகிறோம்
ஒரு முறையேனும் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்

திட்டமிட்டு எதுவும் நடக்காதபோது
மழையைப் பார்த்துச்
சிரித்துக்கொண்டிருக்கவா
இறங்கி நடந்துவிடலாமா
யமுனா இங்குதான் இருக்கிறாயா?

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -