புத்தரின் தியானக் குறிப்பேடு

மூன்று கவிதைகள்

- Advertisement -

புத்தரின் தியானக் குறிப்பேடு

நதிக் கரையில் புத்தர்
அக்கரையைப் பார்த்தபடி
கசப்பும் வலி நிரம்பிய தொன்மையும்
இரு கண்களில் பீறிட.

வறண்டு நீரற்று
சாவின் விளிம்பில் உழலும்
முதிய மரத்தைப் போல
அந் நதி விசனமாய்.

யாரும் கடக்கலாம் எளிதாக
ஆனால் அவரோ
தீராத யோசனையோடு
கவலையும் வேதனையும்
கொப்பளிக்கும் முகத்துடன்.

கடந்து போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்
வந்தவர்கள்
திரும்பி போகிறார்கள்.

பயணம் தொடருகிறது…

காற்று வீசுகிறது மழை பெய்கிறது
சூரியன் வெளியேறி நிலா வருகிறது
இரவு கரைந்து பகல் வருகிறது
இருளும் ஒளியும் மாறி மாறி.

நீர் வரக்கூடிய அறிகுறிகள் இல்லை
கொதிக்கும் மணலாய்
வாழ்வுள் பெருகுவதைத் தவிர
வாழ்வதின் சூழல் குளிர்வதாயில்லை.

நிலைகுத்திய பார்வையோடு
அக்கரையை நோக்கி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறார்
புத்தரும் சூனியத்தின் மீது.

மனிதர்கள்
காலத்தைத் தாண்டி
இச்சை போனபடியே
போய்க் கொண்டிருக்கிறார்கள்.

??????????????????????????

பிடி சாபம்

வீட்டுக்குள் நின்று கொண்டு
அதை
வெடி வைத்து தகர்ப்பது போல
ஒரு பெண்ணை சிதைப்பது.

அவளின் உடல்
கண்ணாடிப் பேழையாலானது
வல்லாங்கில்
சில்லுச் சில்லாய்த் நொறுங்குகையில்
தெறித்துப் பாயும்
காலங்களின் உயிர்த்தலங்களுக்கு.

வம்சத்தின் வேர் இற்றுப்போக
வாழ்வின் ஆன்மாவில்
அபலையின் ரத்தக்கறைப்
படியும் அழியாது.

கடவுளின் பிம்பம் உருகி ஆவியாகும்
நாகரீகம் கரைந்து மறையும்
பண்பாடு , கலாச்சாரம் யாவும்
காற்றில் வரைந்த ஓவியங்களாகும்.

அணுகுண்டால் நகரங்களை
கதிர் வீச்சால் உயிர்ஜீவிகளை
நிர்மூலம் செய்வது போல
தீராத வேதனைகளைத் தருவிக்கும்.

கள்ளமில்லாக் கனவுகள் மீது
குரூரத்தின் திராவாகத்தைப் பெய்வது
சாதுவான நிலத்தைப் பிளந்து
சர்ப்பத்தின் விஷக்கொடுக்கை தீண்டுவது
கனிமரத்தைப் பூவும் பிஞ்சோடு
வேரோடு மண்ணோடு
பெயர்த்து வீசுவது
மனிதனை நீண்டு வாழவைப்பதில்லை..

மலரைக் கல்லால்
நசுக்குகிற
கொடூரமிது.

??????????????????????????

கண்டம்

திக்குமுக்காடுகிறேன்
திணறுகிறேன்
அழகின் புயலில் நான் சிக்கி இருக்கிறேன்
வேண்டாம் என்றால் வேண்டும்
வேண்டும் என்றால் வேண்டாம்
வறட்டுப் பிடிவாதங்கள்
இடும்பைத் தரும்
நரம்புகளில் இசை ஓடுகிறது
நாவில் துளிர்க்க தயங்குகிறது
மெளனத்துள் யாவற்றையும் குறிப்பெடுத்து இசைக்கிறேன்
ஆயிரம் கண்டேன்
ஒன்றைக் கூட பறிக்க முடியவில்லை
கனவுகள் நின்றபாடில்லை
வாழ்ந்தால் புகழும்
வீழ்ந்தால் இகழும்
எலும்பில்லா நாக்கு
மனசாட்சி உருக்கொண்டு நடமாடும்
நினைக்காத நேரத்தில் விசுரூபிக்கும்
பாவச்சுவடுகள் தோறும்
தீ மூட்டும்
கவிதையே பொய்யடா
வார்த்தை அடைத்த பைய்யடா
காலமே மெய்யடா.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -