சகடக் கவிதைகள் – 39

ஆழப் பதிந்த தடம்

- Advertisement -

ஆழப் பதிந்த தடம்

பற்றுக்களை தேர்வு செய்வதில்
பல்லாயிரம் வகை மனங்கள்

எதைப் பற்றுவதால்
வேறெதையும் பற்றாமல் போவோமோ
அதைத் தவிர அத்தனையும்
அட்டவணையில் இடம்பெறும்

எதையும் பற்றாமல்
எவ்வாறு மேலேற முடியும்?
சிகரத்தை தொட முடியும்?

கண நேரப் பற்றுதல் மட்டுமே
கடந்து செல்ல வைக்குமே அன்றி
காலத்திற்கும் பிடித்திருத்தல்
கரை சேரா ஊசலாட்டமே

இறுகப் பிடித்ததை விட மறந்தால்
பிடித்தது பிடித்துக்கொள்ளும்
இருந்த இடத்திலேயே தேங்கி
இடைநிலையே இலக்காகிவிடும்

இன்பமாய் தோன்றும் இடைநிலைகள்
இறுதிவரை இனிப்பதில்லை
இவையறியா மனம்
இருப்பதின் மீதே தன்
இரும்புப் பிடியை இறுக்கும்

தித்திக்கும் தேன் சுவையோ
தேள் கடியின் கொடுவிஷமோ
தாண்டும் லாவகம் தெரிந்தால்
இரண்டுமே ஒன்றாவதை உணரும்

சிறைபிடித்த சங்கிலியில்
தங்கமென்ன தகரமென்ன
அடைபட்ட மனம்
அன்பால் நொறுங்காதவரை

வருடக் கணக்கில் வேர் விட்டாலும்
வானை நோக்கி எத்துணை வளர்ந்தாலும்
கரையான் வந்தபின் காணாமல் போகும்
கடினமானவையும் அன்பால் கரையும்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -