யமுனாவீடு – 70

தொடர் கவிதை

- Advertisement -

தேவைகளுடையவர்கள்
பலவீனமானவர்களை
கண்டுகொள்ளும் உலகில்

உறுதியாகச் சொல்லமுடியும்
இங்கெல்லோரும்
குறையானவர்களே

கொத்தித் தின்னப்போகும்
பறவைக்கான இரை
அன்பின் மொழியில் பேசுவது

ஒவ்வொருவருக்குக்கும்
ஒரு அன்பின் மொழி
தாங்கமுடியாத புன்னகை

சிறகடித்துப் பறக்கும்
பறவையின் கூண்டைத்
திறந்துவிடுபவர்களாக
இருக்கட்டும்

அவனுக்கான கோபங்கள்
இங்கு எதுவுமில்லை
எதிர்பாராத ஒன்றுதானே

திரும்பத் திரும்பத் நிகழும்
சலனமற்ற
மனதோடு பேசுங்கள்
சிரித்துக்கொண்டே இருங்கள்

சந்தித்த முதலிலேயே
சொல்லிவிடுங்கள்
நாமிருவரும் செத்துவிடுவோமெனும்
உண்மையை

பிறகு நிறையப் பேச வேண்டியதில்லை
கிடைக்கும் நேரத்தில்
சின்ன சின்னதாய் பேசலாம்

பரிச்சயமானவர்கள்
எல்லோருக்குமே
ஒருகை உணவை பிசைந்தூட்டுங்கள்
மறுபடியும் பிறக்கப்போவதில்லை

ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களில்
யமுனா
நிலைக்கண்ணாடியைப்போல
எனக்கு

இனி என்ன வேண்டும்
யமுனாவின் விரல் நுனி பிடித்து நடக்குமொரு பிறப்பு….

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -