கையருகில் வானம்
அம்மா சோறூட்டும்போது
நிலாவிற்காக முரண்டு பிடிக்கிறாள்
அப்பாவின் செல்ல இளவரசி!
அரூபமான நட்சத்திரங்களையும் தருகிறேனென
அவளைத் தோள்களில் சுமக்கிறார் அப்பா.
எட்டாததற்காக எட்டிக் குதித்து இறைஞ்சதால்
கையருகில் அவ்விசும்பே மனமிறங்கியதும்
இவ்வளவு நட்சத்திரங்களாவென- எள்ளி நகைத்தபடி
கூடையைத் தூக்கி செல்கிறாள் அம்மா !
இதுவரை நிலவைப் பார்க்கவைத்தே உண்டதற்கு
இன்றாவது ஊட்டியே தீர்வேனென மன்றாடுகிறாள்.
முயலை மூன்று கால்களோடு ஓடவிட்டவளே…
‘நிலவை எறும்பு விழுங்கிவிடும்
வாயைத் துடைக்க மறந்துவிடாதே’ என மிழற்றுகிறார் அப்பா!
மறுபக்கம் பரணுக்கும் நாற்காலிக்குமிடையே
சுமையோடு எவ்வி நிற்கிறாள் அம்மா!