பெருநகர் கனவுகள் – 6

பேசாதே கண்மணியே

- Advertisement -

பேசாதே கண்மணியே

உன்னிடம் கேட்பதெல்லாம்
ஒன்றுதான்
என்னருகே பேசாமல்
நின்றிரு.

இருந்து பின்னர் தொலைவது
அத்துணைச் சாதுர்யமான காரியமல்ல
என்பதை உனக்குச் சொல்கிறேன்.
அதுவரை பேசாமலிரு.

நம் கண்களில் ஊரும்
வெறுமையும் வெயிலும்
கடவுள் கொடுத்த வரம்
என உணர்த்துகிறேன்.
அதுவரை அமைதியாயிரு.

வேடிக்கை பார்த்தலில்கூட
ஞானம் பிறக்கும்
என்பதைக் காட்டுகிறேன்.
அதுவரை ஒரு வார்த்தையும்
உதிர்க்காமலிரு.

நீயும் நானும்
யாருமே பொருட்படுத்தாத
ஒரு பொழுதில் அமர்ந்திருக்கிறோம்
என்பதை உரைக்கிறேன்.
அதுவரை மௌனித்திரு.

உனது வார்த்தைகள்
இந்தப் பெருநகர் முதுகில்
புரண்டுவிட்டுப் போகும்
தெருநாய்களின் பசிக்கு ஒப்பானவையாகும்.
ஆகையால் பேசாமலிரு.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

1 COMMENT

  1. மௌனத்தின் விளிம்பில் ஓராயிரம் உணர்வுகள்,பிரதிபலிப்பு,பரிமாணங்கள் ஒளிந்து கிடைக்கின்றன.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -