இரண்டாவது குளியல்

கார்கால சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு

- Advertisement -

இரண்டாவது குளியல்

மாருதி, மலர் ஆஸ்பத்திரியைத் தாண்டி பங்க் ஒன்றில் நிரப்புகிற போதுதான், விசாலாட்சிக்கு நினைவு வந்தது. தலையில் குட்டிக் கொண்டு “குறள்லே வருமே? ‘நெடுநல் உளன் ஒருவன்’ ம்… மூணு நாள் முன்புகூட சங்கரன் உங்ககூட பேசினாரே?”

ஜயராமன் ஒரு பெருமூச்சு விட்டார். “என்ன செய்ய? இந்த ஃபிளாட்லே இருக்கும்போது நிறைய உதவி பண்ணியிருக்கார்.”

உண்மைதான். கிழக்குத் தாம்பரத்திலுள்ள பழைய வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, இங்கு அடையாறு தளவரிசைகளுள் குடியேறின போது, அவர் செய்த உதவிகள் கொஞ்சமா என்ன? ஒரு நாள் ஆறு மணிக்குமேல் எலக்ட்ரிஷியனை வரவழைத்து, சுவரில் ட்ரில்லிங் வேலை செய்கையில், தளக் காரியதரிசி இந்தியிலும், ஆங்கிலத்திலும் போட்ட இரைச்சல், பணிப்பெண்ணுக்காகத் தேடும்போது, காவலாளி புதியவர்களைக் கூட்டிக் கொண்டு வந்ததில் ஏற்பட்ட தடுமாற்றம், “உங்கள் ஃப்ளாட்டிலிருந்துதான் தண்ணீர் ஒழுகுகிறது” என்று அரசியல் தொடர்பான மனிதர் போட்ட சண்டை…

எல்லாப் பிரச்னைகளிலும், கூட வந்து தனக்காகப் பரிந்து பேசி வக்காலத்து வாங்கியவர் சங்கரன்தான். பின்னர் ஒரு நாள் குடியிருப்பு தள விதிகளை நீளமாக எடுத்துச் சொல்லி சிலவற்றைப் பெரிதுபடுத்தாமல், அதனதன் போக்கில் விட்டுவிட வேண்டுமென்று அறிவுரை தந்தவரும், அந்த 80 பிளஸ் முதியவர்தான்.

அவர் இன்று இல்லை. காலமாகி நாலு நாளாகப் போகிறது. அந்த மரணச் செய்திகள் வருகிற ஆங்கிலத் தினசரியை வலை தளத்தில்தான் பார்ப்பார். என்றென்னவோ மறந்து போய்விட்டது. நான்காவது மாடித் தள மனோகர் “சார் விஷயம் தெரியுமா? நம்ம ஃபிளாட்டிலிருந்தாரே…?” என்று ஆரம்பித்தார்.

ஜயராமனுக்கு வெளியே போகிற அவசரம். “சொல்லுங்கள்”

“சங்கரன் போய்விட்டாராம்! மாஸிவ் அட்டாக்காம். நல்ல மனிதர் பாவம்!”

சட்டென்று அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்டார் அவர். “சங்கரன்? நம்ம சங்கரன் சாரா?” தனக்குத் தானே கேட்டு மாய்ந்து போனார். இரண்டு நாள் முந்தின தினசரியை வாங்கி ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.

சங்கரன் தன்னிடம் அவ்வப்போது சொல்லுவது இப்போதும் காதில் ஒலிக்கிறது. “நீங்க இங்கே தனிக்காட்டு ராஜா இல்லே. தளவீட்டுக் குடிமகன்களில் ஒருத்தர்.”

முன்பின் அறிமுகமே இல்லாத தனக்கு ஒரு வழிகாட்டி போல் விளங்கின சங்கரன் இறந்து போய் இன்று நாலாவது நாள்.

வாகனம்  தடாலென்று நின்றது. நினைவோட்டம் கலைந்தவராக, ஜயராமன் எட்டிப் பார்த்தார். யாரோ ஒரு ஆட்டோக்காரர் குறுக்கே செல்ல முயன்றிருக்கிறார். டிரைவர் கதவை வேகமாகத் திறந்து மோசமான வசவைப் பிரயோகிக்க, பதிலுக்கு அவனும் பாய, சிறு கூட்டம் சேர, விசாலாட்சிக்குப் பயம் வந்தது… “சரி விடப்பா. எங்களுக்கு சீக்கிரம் போகணும். எடு வண்டியை” என்றாள். கணவரின் காதோடு “நல்ல டிரைவரா அனுப்ப சொல்லக்கூடாதோ?” என்று கிசுகிசுத்தாள்.

“உஸ்ஸ்” என்று அவளை அடக்கினார். மறுபடியும் வாகனம் புறப்பட்ட போது, சடசடவென்று பெரிய மழை பிடித்துக் கொண்டது. “என்னங்க, வைப்பர் சரியா வேலை செய்யலியே?” என்று சலித்துக் கொண்டான் டிரைவர். “யார் வண்டி ஓட்டறது?”

“நான்தான். இப்போ கொஞ்ச நாளா ஓட்டறதில்லே. உங்க முதலாளிதான் அப்பப்ப அனுப்புவாரு.”

“அடிக்கடி டிரைவர் மாறினா, வண்டி கெட்டுப்போயிடும்” என்றான்.

“இவன்வேற சமய சந்தர்ப்பம் தெரியாமல் உபதேசம் பண்ணறான்” என்று ஜயராமன் எண்ணிக்கொண்டார்.

சிலுசிலுவென்ற வானிலையோ, கார் ஏஸியோ — ஏதோ ஒன்று, அவருக்கு மூக்கு அடைத்தது. அஸ்க் என்று தும்மினார். தொடர்ந்து சில தும்மல்கள்.

“காலையிலே குளிக்க ஏன் அவசரம்? நேற்றே சொன்னேனே?”

“மறந்துபோச்சு விசாலம். மறுபடியும் வந்து குளிக்கணுமோ?”

“நல்ல கேள்வி. நீங்க எதையும் காதிலே போட்டுக்கறதில்லே.”

“போட்டுக்காமல்? இதோ என் தோடு” என்று இயரிங் எய்டைக் காண்பிக்கத் தோன்றிற்று. துக்கம் விசாரிக்கப் போகும்போது, இதுபோன்ற பேச்சுக்கள் வேண்டாமென்று என்னவோ மவுனமானார்.

விரைந்து கொண்டிருந்த வண்டி ஆழ்வார்பேட்டில் நின்றது. தேவாலயத்தில் ‘என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்ற வாசகம் தெரிந்தது.

உள்ளபடிக்கே அதுபோல் செய்தவர் சங்கரன். மறுக்க முடியுமா என்ன? ஜயராமனுக்கு ஞாபகம் வந்தது. இதேபோல் தும்மல் ஜலதோஷம் கூடவே தொண்டைக்கட்டு வேறு

எந்தக் கை வைத்தியங்களுக்கும் பலனே கிடைக்கவில்லை. மாறாக அதிகமாயிற்று. மூச்சிரைப்பு வேறே. பம்பாயிலிருந்து பெண் சந்தியா கூட, போனில் உரையாடிய போது, “என்னப்பா இது? உங்களால் பேசக்கூட முடியவில்லையே? டாக்டரிடம் போங்கப்பா” என்றாள்.

“என்ன ஜயம்? ஆளையே காணோம்? பால்கனியிலே பார்க்கவே முடியலை?” என்று கேட்டுக்கொண்டே சங்கரன் மணியை அழுத்தினார்.

அவரை வரவேற்கக்கூட இயலவில்லை. “வாங்கோ” என்றார் பலவீனமான குரலில். அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்டார்.

“என்ன சார்? உங்க ஓய்ப் எங்கே? டாக்டர்கிட்ட போகக் கூடாதோ? ஜுரம் இருக்கு போல?” கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினார்.

“வேலைக்காரி வரலை. அவளைத் தேடிண்டு வேற ஃபிளாட்டுக்கு…” ஜயராமனால் மேலே பேசவே முடியவில்லை.

“என்ன ஆயிற்று? எப்படி மயக்கமாய் விழுந்தோம்? யார் அழைத்துப் போனார்கள்? காரில் தன்னை உட்கார வைத்ததும், ஆஸ்பத்திரிக்குள் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு போனதும் – கனவு போலவே தோன்றிற்று.

டாக்டர், ஜயராமனைப் பார்த்ததுமே, தங்குமாறு சொல்லி உத்தரவு போட்டார்.

“என்ன சார்? வாட்ஸ் திஸ்? ஆஸ்துமா உண்டா?” என்று கேட்டபடியே, தாம்பரம் டாக்டர் எழுதின மருந்துச் சீட்டுகளை ஆராய்ந்தார்.

“ஓக்கே, நீங்க ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும். ‘ப்ளூயிட்’ நிறைய சேர்ந்திருக்கிற மாதிரி இருக்கு” என்று கூறின நிபுணரைப் பரிதாபமாகப் பார்த்தார் ஜயராமன்.

ஒரு வாரம் என்பது நாட்கள் தள்ளிக் கொண்டே போயிற்று. ‘டிரிப்ஸ்’ மாத்திரைகளுடன் இல்லாமல், பல பரிசோதனைகள், எக்ஸ்ரே, இசிஜி, சிறுநீர் சோதனை, மார்பிலிருந்து திரவ வெளியேற்றம்.

பம்பாயிலிருந்து துணைக்கு பெண் சந்தியாவால் வர முடியவில்லை. அவ்வப்போது விசாலாட்சி சமைத்து எடுத்துக் கொண்டு வரப்போகும் போதெல்லாம், கூட இருந்தவர் சங்கரன்தான். அதோடு மட்டுமா? மந்தைவெளி, பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று வேறு வேறு இடங்களுக்குச் சென்று சோதனை செய்வதற்கும் உறுதுணை அவர்தான். ஏன்? சிற்சில சோதனைகளுக்கு தொகை பணமாகத் தரவேண்டியிருந்தபோது கூட, ஒத்தாசையாக இருந்தவர் அவர்தான்.

அவர் இப்போது காலமாகிவிட்டார். நாலு நாளாகிறது. அடுத்த ஞாயிறு அவர் தம் முன்னோர்களுடன் சேர்ந்துவிடுவார். திங்களன்று பதின்மூன்றாம் நாள் விருந்து.

கணவன், மனைவி இரண்டு பேருக்குமே துயரம் தொண்டையை அடைத்தது. யாருமே பேசிக் கொள்ளவில்லை. இன்னும் மழை விடவில்லையா? தூறல் தெறிக்கிறதே? எந்த இடம்?

சேத்துப்பட்டு பிரிட்ஜ் தாண்டிவிட்டதா? எங்க இருக்கிங்க! ஒரு தபா கேட்டேன். தூக்கமா, யோசனையா தெரியல. கம்னு இருந்தீங்க. டிரைவர் குரலில் லேசான எரிச்சல் தெரிந்தது.

“லேடி.பெ.ஸி. ஸ்கூல் வழியாகப் போனால்தான் எனக்கு வெள்ளாள தெரு அடையாளம்…” என்று ஜயராமன் முடிக்கு முன்னரே

“அது முடியாதுங்க. ஒன் வே!” என்ற பதில் வந்தது.

எதிரே சீருடை தரித்த மாணவர்கள் ஊர்வலம் வந்தது. சுதந்திர தினத்துக்கான ஒத்திகை போல. தேசபக்திப் பாடலும், வேறு ஏதோ பாடலும் ஒலித்தன. வேண்டா வெறுப்புடன் ஒரு போலீஸ்காரர் வரிசையை ஒழுங்குபடுத்தியபடி இருந்தார்.

நிற்கிற வாகனத்தைக் கண்டு சைக்கிள் பையன் ஒர் இலவச உள்ளூர் ஏட்டை வீசிவிட்டுப் போனான்.

“நாங்க இந்த ஏரியா இல்லைப்பா” என்று முணுமுணுத்தார் ஜயராமன். அதைப் புரட்டிக்கொண்டே, சட்டென்று அவர் மனக்கண் முன் சங்கரனின் நினைவுகள் நிழலாடின.

எத்தனை தரம் சங்கரனின் பெயரும், புகைப்படமும் ‘அடையார் டேஸ்’ ஏட்டில் வந்திருக்கிறது! தான் வசிக்கிற குடியிருப்பில் நிலவின பிரச்னைகள் அவரை உறுத்தின.

நடமாடும் ‘ஏடிஎம்’ வேனில் மறைந்திருக்கிற இடர்கள், கழிப்பிட வசதியின்மையால் பஸ் நிறுத்தத்தில் காணப்படுகிற அசிங்கங்கள், போக்குவரத்துக்கு இடையூறு தருவதுபோல் வாகனங்கள் நிறுத்தும்விதம்.

சளைக்காமல் இவற்றைப் பற்றி உள்ளூர் ஏட்டுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருப்பார்.

ஒரு சில பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்து, புகைப்படத்துடன் வார ஏட்டில் வெளியாகும். அப்போது சங்கரன் முகத்தில் ஏற்படுகிற சந்தோஷம்.

சற்று தள்ளியிருந்த கண்ணகி நகரில் கூட இவரைப் பற்றி தெரிந்திருக்கும்போல. ஒருமுறை யாரோ ஒரு இளைஞன், ஜயராமன் வீட்டுக் கதவை தட்டி “அடையார் டேஸ்ல கடிதம் எழுதுவாரே? அவர் வீடுதானே?”

“நோ. அவர் மூணாம் மாடி. எஸ்4. எனி ப்ராப்ளம்?”

இளைஞன் நன்றி தெரிவித்துவிட்டு உடனே அகன்றான். குறிப்பிட்ட இடத்துச் சிக்கல் கொஞ்ச நாளிலேயே தெரிந்தது. அவன் பெட்டிக்கடை வைத்திருக்கிறான். அருகில் யாரோ சாலையைத் தோண்டியிருக்கிறார்கள். மழை பெய்ததால் நீர் தேங்கி, கடைக்கு யாருமே வருவதில்லை. ஓர் அரசியல் சார்புள்ள பெரிய மனிதர், கடை, அதுசார்ந்த காலி இடம் இவற்றை வளைக்க முனைந்திருக்கிறார்.

சங்கரன் விடவில்லை. நேரே கண்ணகி நகருக்குச் சென்று புகைப்படம் எடுத்து, வார ஏட்டில் பிரசுரிக்கச் செய்தார். குறிப்பிட்ட நபர் மிரட்டியும் கூட, அவர் மசியவில்லை. விடாது சண்டை போட்டு, பெட்டிக்கடை இயல்பாக இயங்க ஆரம்பித்தபின்தான் சமாதானமானார்.

ஜயராமன் “இதெல்லாம் ரிஸ்க் சார்! ஏன் வீண் வம்பு?” என்று கேட்டதற்கு

“எல்லாமே ரிஸ்க்தான் இந்த நாளில்! ரோட்டில் நடக்கும் போது கால் தடுக்கி பிராக்சர் ஆவதும் ரிஸ்க்தானே? “” என்று சங்கரன் சீரியஸாகவே பதிலளித்தார்.

“ஹும்ம்ம்” என்று முனகினார் ஜயராமன். நேரம், காலம் தெரியாமல், அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு அக்கறையுடன் உதவின சங்கரன் இன்று இல்லை. நேரம் நெருங்க, காலன் கொண்டு போய்விட்டான். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.

“இதாங்க வேளாளர் தெரு. வண்டி போகமுடியாது. ஒன் வே” என்றான் டிரைவர்.

இருவரும் இறங்கி நடந்தார்கள். ஆச்சரியப்படத்தக்க விதத்தில், இப்போதுதான் சங்கரனின் குடும்பம் நினைவு வந்தது. இரண்டு பிள்ளைகள், ஒரு பெண். பிள்ளைகள் வெளிநாட்டிலும், பெண் டெல்லியிலும் வசிக்கிறார்கள். ஒரு தரம் கூட பெருமை பேசிக் கொண்டதே இல்லையே?

“சதாபிஷேகம் ஆகி முழுசா ரெண்டு வருஷம் கூட முடியலை, போயிட்டாரே” என்றாள் விசாலாட்சி. நிஜமான சோகத்துடன்.

“அதற்கு நாம வர முடியல. சந்தியா கூட பம்பாயிலே இருந்தோம்” என்றார் ஜயராமன்.

“ஒரோரொத்தர் பங்ஷனை வீடியோ போட்டு காண்பிப்பார்கள். மனுஷன் நமக்கு காட்டக்கூட இல்லை. மழுப்பினார்.”

“ம்… அது ஆன ஆறே மாசத்திலே மனைவி போய்விட்டாள். அந்த வருத்தமே பாதிச்சு விட்டதோ?”

மவுனம் கனமாக இருந்தது. விட்டிருந்த மழை மீண்டும் தூற்றல் போட ஆரம்பித்தது. ஜயராமன் ஞாபகமாக செவிக் கருவியை வேறு பையில் போட்டுக் கொண்டார்.

வீட்டைக் கண்டுபிடித்து, சரியான தள எண்ணின் வாசலில் நின்றார்.

“இதுதானே சங்கரன் சார் ஃப்ளாட்?”

“ஆமாம். யாரைப் பார்க்கணும்” காவலாளி கேட்டான்.

ஜயராமனுக்கு இந்தக் கேள்வியே வினோதமாக தோன்றியது. துக்கம் விசாரிப்பவர்கள், குறிப்பிடுகிறார் போல ஒருத்தரையா தேடி வருவார்கள்? திரும்பி நோக்கினார். ஓரிரண்டு வாகனங்களே தெரிந்தன. இன்று ஞாயிற்றுக் கிழமை. பலர் விடிகாலையிலேயே வந்து போயிருக்கலாம் என்று சமாதானம் செய்து கொண்டார்.

லிப்ட் வேலை செய்யவில்லை. காலையில் குடித்த ஒரு டம்ளர் காபிதான். பசித்தது. மோசமான டிரைவர். ஒரு வழிப்பாதை, போக்குவரத்து இடைஞ்சல்கள் எல்லாம் சேர்ந்து தாமதமாகிவிட்டது.

எப்படியோ படி ஏறிச் சென்றார்கள். அழைப்பு மணியை அழுத்தினார். ஒரு வயதான மாது வந்து கதவைத் திறந்தாள். ஹால் காலியாக இருந்தது. ஏன் பிள்ளைகள், மருமகள்களை காணோம்? மீசை வைத்த சிட்னி பையன் எங்கே?

பின்னாலிருந்து மெதுவாக – அதே சமயம் பிறருக்கு கேட்க வேண்டுமென்பதற்காகவோ,

“யாரும்மா? விசாரிக்க வந்திருக்கிறார்களா? அப்பாதான் சமூக சேவகர் ஆச்சே! ஊருக்கு நல்லவர். வரேன்” என்ற குரல் கேட்டது. “காய்ச்சின பாலிருக்கு. சட்… கார்த்தாலேருந்து காஸைப் பத்தவைச்சு, பத்த வச்சே, காஸே தீர்ந்திடும்போலிருக்கு”

“மெதுவா பேசு” என்றது ஒரு ரகசிய குரல்.

ஜயராமனுக்கு என்னவோ போலிருந்தது. பாவம் அழுது, அழுது, பேசிப் பேசி உடம்பு பலவீனமாகி இருக்கும். இதையெல்லாம் பெரிதுபடுத்தலாமா?

விசாலாட்சி ஆரம்பித்தாள். “நாங்கள் அடையாரிலிருந்து வரோம். எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்கார். என்ன ஆச்சு? ஆஸ்பிட்டல்ல ரொம்ப நாளிருந்தாரோ? சிட்னி பிள்ளை எங்கே?”

பெண்ணின் முகம் கருத்தது. வயோதிக மாதுதான். “ஆஸ்பிடல்லதான். பக்கத்து ஃபிளாட்காரர்தான் கூட்டிண்டு போனார். B.P. எகிறி மயக்கமாயிட்டார்.” ஏதோ கடமைக்குச் சொன்னது போலிருந்தது.

“அமெரிக்க பிள்ளை… மூத்தவன்?”

பெண் உடனே “எல்லாரும் வந்த பின்தான் பாடியை எடுத்தோம். ஆச்சே வயது 82.” என்றாள்.

மேசையிலிருந்த ஆறின காப்பியை அருந்தினார்கள். மேற்கொண்டு ஏதுமே பேசத் தோன்றவில்லை. இதுபோல் முகத்திலடித்தாற்போல் பதிலளித்தால்.

“பிள்ளைகளிடம் சொல்லுங்கள்” என்று கிளம்பினார்கள். கதவு படிரென்று சாத்தப்பட்டது.

“அப்பப்பா, ஒரே தொந்தரவு. அதான் ரெண்டு அண்ணிக்களும், ஓட்டலுக்கு போய்விட்டார்கள்.” என்ற குரல், படிகளில் இறங்குகையில் ஒலித்தது.

வெளியே நின்று காரை எடுக்குமாறு ஓட்டுனரை விளித்தபோது, காவலாளி நெருங்கினான்.

“ஏதோ பிரசனைங்க போல. பாடியை எடுக்கற போதே சச்சரவு. சொத்து பிரசனையா இருக்கும். நானும் இந்த பில்டிங்ல நிறைய சாவு குடும்பத்தை பார்த்திருக்கேன். ஆனா, இந்த மாதிரி…” என்று சொல்லிக்கொண்டே போனவன் நிறுத்தினான்.

“சாரைப் பார்த்ததும் ஏதோ சொல்லணும் போல தோணிச்சு” என்றான்.

“பரவாயில்லை” என்றார் ஜயராமன். வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். ஏதுமே பேசிக்கொள்ளவில்லை. துயரம் மாத்திரமல்ல… மூன்றாம் மனிதரான ஓட்டுநர் முன்னிலையில் ஏதாவது, சொல்லிவிடுவோமோ என்ற எச்சரிக்கை உணர்வும்தான்.

கைப்பேசி ஒலித்தது. “நான்தான் அடையார் ஸ்வஸ்திக் ஃபிளாட் எஃப்2. சங்கரனோட குடும்பத்திலே சச்சரவாம். சதாபிஷேகத்துக்கு வருவதற்கே செலவு என்றெல்லாம் கூப்பாடு போட்டார்களாம்.” என்று மறுமுனையில் பேசிக் கொண்டே போனார்.

“ஏதோ காரியம் நல்லபடியா முடிந்து 13ம் நாள் நடந்தால் சரி.” என்றார் ஜயராமன்.

“காரியமாவது, ஒண்ணாவது! 13ம் நாள் ஓட்டலிலேயாம். செலவு ரொம்ப ஆகிறதாம்.!”

ஜயராமனின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. இந்த பிள்ளைகளையும், பெண்ணையும் வளர்க்க என்ன பாடுபட்டிருப்பார். புரசைவாக்கம் சாஸ்வத நிதியில் நகைக்கடன் வாங்கி படிக்க வைத்தாராம். பெண் கல்யாணத்துக்குக்கூட கடன் வாங்கினாராம். ஒரு முறை மனம்விட்டு பேசியிருக்கிறார்.

இப்போது? வைதீகச் சடங்குகளுக்கு கணக்குப் பார்க்கிறார்கள் வெளிநாட்டுப் பிள்ளைகள். தனக்கு நிறைய தரவில்லை என்று குறைப்படுகிறாள் பெண்.

வாகனம் மீண்டும் ஆழ்வார்பேட்டையில் நின்றது. “எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு” என்று பாடிக் கொண்டே சிறுவர்கள் ஊர்வலம் போனார்கள்.

விசாலாட்சி கலங்கின கண்களுடன் கணவரை நோக்கினாள். அடையார் ஆவின் பூத்தை நெருங்கம்போது மழை வலுத்தது.

“வீட்டுக்கு போய் ஒரு சொம்பு மேலுக்கு தண்ணி விட்டுக் கொள்ளுங்கோ போதும். பசி… சாப்பிட வேண்டாமா?” என்றாள் அவள்.

மனைவியை நிதானமாக பார்த்தார் ஜயராமன். ஒரு நிமிடம் மவுனம். “இல்லை விசாலம். கீஸர் போடு. நன்றி கெட்ட சங்கரனோட பிள்ளைகளுக்காக நன்றாகவே குளிக்கலாம்!” என்றார் உறுதியாக.

‘நீரினில் முழுகி நினைப் பொழிந்தாரே’ என்ற பட்டினத்தார் பாட்டு அவருக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது.

வாதூலன்
வாதூலன்
1960 முதல் பிரபலமான பத்திரிகைகளில் 400 க்கும் மேற்பட்ட கதைகள், 200 கட்டுரைகள் போன்றவற்றை வாதூலன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார். ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இசை பற்றிய 2 புத்தகங்கள், 1 சிறுகதைத் தொகுப்பு மற்றும் இந்து மதம் பற்றிய 8 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். விகடன் முத்திரை கதை, கல்கி சிறுகதைப் போட்டி, அமுதசுரபி பொன்விழா சிறுகதைப்போட்டி, தினமணி சிறுகதை போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். தற்பொழுது தினமணியில் நடுப்பக்க கட்டுரைகளை எழுதி வருகிறார்.

1 COMMENT

  1. இன்றைய சமுதாய நிலை. எல்லோராலும் உணர பட வேண்டும்.. மன சாட்சி என்று ஒன்று உளதோ….?

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -