பாகிஸ்தானும் புத்தகமும் – முன்கதை

அனுபவக் கட்டுரை + புத்தக விமர்சனம்

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இஸ்லாமாபாத்

Declan Walsh எழுதிய The Nine lives of Pakistan எனும் புத்தகத்தை சென்ற பகுதியில் உங்களுக்கு அறிமுகம் செய்தேன் அல்லவா? அதன் விமர்சனத்தை கூறுவதற்கு முன்பாக உங்களுக்கு சில முன் கதைகளை நான் கூற வேண்டும். அந்த முன் கதைகள் தெரிந்தால் மட்டுமே புத்தகம் உங்களுக்கு மேலும் சுவாரசியமாக தெரியும். அதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள். புத்தக ஆசிரியர், பாகிஸ்தானின் பெரும் சரித்திரங்களை தனது புத்தகத்தில் ஆங்காங்கே ஒருவரியில் கூறிவிடுகிறார். ” பாகிஸ்தானில் இருந்து 30 நிமிடம் பயணித்தால் இஸ்லாமாபாத் வந்துவிடும்” என்று ஒரு இடத்தில் தனக்கே உரிய நையாண்டித்தனத்துடன் கூறுகிறார். அதற்கு காரணம் பாகிஸ்தானுக்குள் இஸ்லாமாபாத் என்றுமே தனித்து விளங்குவதாக கூறியுள்ளார். மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமான தெரியும் இந்த சம்பவம், வரலாற்றுடன் சேர்ந்து புரிந்துகொண்டால் ஆச்சரியமாக தெரியலாம். அது என்ன தெரியுமா?

பாகிஸ்தானில் 1960 வரை இஸ்லாமாபாத் என்ற ஒரு நகரமே கிடையாது. 1960களில் உலகத்திலேயே நவீனமயமான ஒரு தலைநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இஸ்லாமாபாத்துக்கான திட்டத்தை உருவாக்கினார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் பெஷாவரில்(Peshawar) இருந்து 25 கிலோ மீட்டர் வடக்கேயும் தட்சசீலத்தில்(Taxila) இருந்து 40 கிலோமீட்டர் கிழக்கிலும் உள்ள இயற்கை வளம் மிக்க புராதனமான இடம். பல்லாயிரம் வருடங்களாக பட்டுப் பாதையில் (Silk Road) இருக்கும் ஒரு முக்கிய வணிகத்தளமாக பெஷாவர் விளங்கியது. தட்சசீலம் அதைவிட மிகவும் புராதனமான 3000 வருட பழமையான பல்கலைக்கழகத்தை கொண்டிருந்தது. ராமாயணத்தில் வரும் ராமனின் தம்பி பரதனின் மகன் தட்சன் ஆண்டதால் இந்த ஊருக்கு தட்சசீலம் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். காலப்போக்கில் பெஷாவரும் தட்சசீலமும் பல்வேறு மேற்கத்திய நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகி களை இழந்து போயிருந்தது. இந்த இரண்டு நகரங்களில் ஏதேனும் ஒன்றை புதுப்பிக்காமல் அதன் அருகிலேயே புதிதாக ஒரு நகரத்தை உருவாக்குவது எளிது என்று முடிவு செய்து இஸ்லாமாபாத்தை உருவாக்கினார்கள். 

உலகின் தலைசிறந்த கட்டுமான வல்லுனர்களை வைத்து அழகான ஒரு தலைநகரத்தை உருவாக்கி அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்தனர். இப்பொழுதும் கூட இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் மிகவும் பாதுகாப்பான நகரமாக விளங்குகிறது. அவ்வளவு திட்டமிட்ட ஏற்பாடுகள். ஆனால் இவ்வளவு திட்டமிட்ட அவர்கள் செய்த மிகப்பெரிய விசித்திரம் என்ன தெரியுமா? அந்த நகரத்தில் ஏழைகளால் வாழவே முடியாது. அந்த நகரம் முழுவதும் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், கோமான்கள் என்று மாட மாளிகையில் வாழ்பவர்கள் மட்டுமே உண்டு. வெறும் மாடமாளிகைகளைக் கொண்ட அந்த நகரத்தில் வேலை செய்யும் பணியாட்கள் கூட அந்த நகரத்தில் வசிக்க முடியாது. பெஷாவரில் இருந்தோ தட்சசீலத்தில் இருந்தோ தினமும் வந்து போக வேண்டும். அதனால் இஸ்லாமாபாத்தில் இருக்கும் பொழுது மிகவும் வளர்ச்சி அடைந்த ஒரு நகரமாக தோன்றும் இடம், கொஞ்சம் வெளியே வந்தால் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திற்கு வந்துவிடும். இந்த வரலாறு அனைத்தையும் ஆசிரியர் ஒரே வரியில் ” பாகிஸ்தானில் இருந்து 30 நிமிடம் பயணித்தால் இஸ்லாமாபாத் வந்துவிடும்” என்று நக்கலாக கூறிவிடுகிறார். இப்போது புரிகிறதா இந்த புத்தகத்திற்கு ஏன் முன்கதை அவசியம் என்று?

இந்த புத்தகம் முழுவதும் இப்படி பலதரப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளை சொல்லியுள்ள ஆசிரியர், அதனைப் பற்றி சிறிது கூடுதலாக விவரித்து இருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. அதனால் அந்த புத்தகத்தை படிக்கும் போது கூடவே இணையத்தில் பாகிஸ்தானை பற்றிய பல்வேறு விஷயங்களை தேடிப்பிடித்து படித்தேன். அதன் சுருக்கத்தை ஒரே கதையாக இங்கே கூறிவிடுகிறேன். இது தெரிந்தால் இந்த புத்தகத்தை படிப்பதற்கு எளிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாகிஸ்தானின் வரலாறு

இந்தியாவைவிட ஒருநாள் முன்னதாக சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், 1956 வரை பிரிட்டிஷ் ராணியின் அரசாட்சியின் கீழ் (dominion) தான் இருந்தது. இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி சுதந்திரம் பெற்று எப்படி ஒரு வருடத்தில் இறந்தாரோ அதே போன்று பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவும் 1948 இல் காலமானார். ஆகமொத்தம் இரு நாட்டை உருவாக்கியவர்களும் அந்த நாடு விடுதலை அடைந்த பின் அதனை பார்க்க முடியாமலேயே போய்விட்டது. முகமதலி ஜின்னா பம்பாய் (Bombay, Mumbai now) மாநகரத்தில் வாழ்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது வீடு மற்றும் குடும்பத்தின் ஒரு பகுதி இன்று வரையிலும் மும்பையில் இருக்கிறது. நம் சிறுவயது முதல் சாப்பிட்டு வரும் மில்க் பிக்கிஸ் தயாரிக்கும் பிரிட்டானியா கம்பெனி மற்றும் ஐபிஎல் பஞ்சாப் அணி (IPL team – Kings XI Punjab) ஆகியவை முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப்பேரன் நெஸ் வாடியாவிற்கு சொந்தமானது.  

பாகிஸ்தானில் மொத்தம் ஐந்து மாநிலங்கள் இருந்தது. அவை பஞ்சாப், சிந்து, வங்காளம், கைபர் கணவாய் பகுதி(கைபர் பக்டுங்க்வா), மற்றும் போலன் கணவாய் பகுதி (பலுசிஸ்தான்) ஆகும். இந்தியாவைப் போலவே அந்த ஐந்து மாகாணங்களிலும் பேசுவதற்கு வெவ்வேறு மொழிகள் உண்டு. ஆனாலும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என்று அறிவித்தவுடன், உருது ஒரு தேசிய மொழியாக மாறிவிட்டது. நாம் பார்க்கும் இந்த புத்தகத்தில், பாகிஸ்தானின் ஐந்து மாகாணங்களிலும் நடக்கும் கதைகளைத்தான் ஆசிரியர் விளக்கமாக கூறியுள்ளார். அதனால் இந்த 5 மாகாணங்களை பற்றியும் ஒரு சிறு குறிப்பை கூறிவிடுகிறேன். புத்தகத்தை படிப்பதற்கு இந்த தகவல் எனக்கு உதவியாக இருந்தது.

வங்காளம்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாநிலத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களாக பிரித்து கிழக்குப் பகுதி பாகிஸ்தானுக்கும் மேற்கு பகுதி இந்தியாவுக்கும் கொடுக்கப்பட்டது. அதனால்தான் இந்தியாவில் மேற்கு வங்கம் என்ற ஒரு மாநிலம் இருந்தாலும் கிழக்கு வங்க மாநிலம் கிடையாது. இங்கே பேசப்படும் முதன்மை மொழி வங்கமொழி. பாகிஸ்தானின் மற்ற நான்கு மாகாணங்களும் ஒன்றாக இருக்கையில் வங்காளம் மட்டும் தனியாக இந்தியாவுக்குள் இருந்தது. இதன் பிறகு ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாட்டால், 1971ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்திற்கு பின்பு இது பங்களாதேஷ் எனும் தனி நாடாகப் பிரிந்து விட்டது.

பஞ்சாப்

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கிழக்கு பகுதியை இந்தியாவும் மேற்கு பகுதியை பாகிஸ்தானும் எடுத்துக்கொண்டது. பாகிஸ்தான் நாட்டிலேயே இதுதான் மிகப் பெரிய மாநிலமாகும். இங்கு பஞ்சாபி மொழி பேசப்பட்டது. பாகிஸ்தான் அரசியலில் பெரும் பகுதி நடக்கும் மாநிலமும் இதுதான். இந்த மாநிலத்தை கட்டுபடுத்தும் ராணுவ அதிகாரிகள் தான் பல காலமாக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர்களாக இருந்தனர். தற்போது இஸ்லாமிய நாடாக இருந்தாலும் 1947 வரை இந்து மதமும் சீக்கிய மதமும் இங்கு தழைத்தோங்கி இருந்தது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் பிறப்பு முதல் (இன்று குருநானக்கின் பிறந்தநாள்!) நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் தான் நடந்தது. அந்த குருத்வாராக்கள் இப்பொழுது வரை அங்கு உள்ளது. இங்கே இருந்த பழைய ஒற்றுமை மற்றும் புதிய பிரிவினைவாதத்தை பற்றியும் புத்தகத்தில் பல சம்பவங்கள் வருகிறது.

சிந்து

இன்றைய பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மாநிலமாக சிந்து மாநிலம் விளங்குகிறது. இங்கு உள்ள கராச்சி போன்ற பல்வேறு துறைமுகங்கள் பல்லாயிரம் வருடங்களாக உலகின் புகழ்பெற்ற துறைமுகங்களாக விளங்கியது. சிந்தி மொழி இங்கு பேச்சு மொழியாக இருந்தது. உலகப் புகழ்பெற்ற மொகஞ்சதாரோ நாகரிகம் இருந்தது இங்குதான். அசர்பைஜான் முதல் பாரசீகம் வரை இருந்த சௌராஷ்ட்ர இன மக்கள் பல்வேறு தாக்குதல்களால் புலம்பெயர்ந்து சிந்து மாகாணத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கிருந்து மீண்டும் புலம்பெயர்ந்து அவர்கள் மதுரை வரை வந்தார்கள் என்பது வரலாறு. கலை மற்றும் பண்பாட்டிற்கு பெயர் போன இந்த மாநிலத்தின் இன்றைய நிலைமை புத்தகத்தில் பளிச்சிடுகிறது.

கைபர் கணவாய் பகுதி(கைபர் பக்டுங்க்வா)

பாகிஸ்தானின் மிகச் சிறிய மாநிலமாக இருந்தாலும் கைபர் கணவாய் பகுதிக்குத்தான் அதிகமான வரலாறு உள்ளது. இவர்கள் பாஷ்தோ மொழி பேசி வருகிறார்கள்.  அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தி இந்தப் பகுதி வழியாகத்தான் கிரேக்கத்திலிருந்து இந்தியா வந்தார். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஒரே நாடு என்ற மனப்பான்மை இல்லாமல் தனித் தனி இனக் குழுக்களாக வாழ்கின்றனர். ஒவ்வொரு இனக்குழுவிற்கும் தனிப்பட்ட சட்டங்கள் உள்ளதால் இதை பாகிஸ்தானுக்குள் உள்ள பாதி சுய சார்புள்ள பகுதியாக (Semi Autonomous region) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, புத்தகத்தின் பல இடங்களில் வருகிறது. இந்த பகுதியில் இருக்கும் ஒரு சிறு குழு தங்களுக்கு வாஜிரிஸ்தான் எனும் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது. இந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை தான் இந்தியாவின் சரித்திரத்தை மாற்றியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். இந்தப் பகுதியை ஆண்ட மன்னனான அகமது ஷா துரானி என்பவன் தன்னை விட படை பலம் அதிகமுள்ள மராத்தியர்ளை மூன்றாம் பானிபட் யுத்தத்தில் வென்றது மட்டுமில்லாமல் தோற்று சரணடைந்த சுமார் எழுபதாயிரம் மராத்தியர்களை உடனடியாக வெட்டிக் கொன்றுவிட்டு ஒரு ரத்த ஆற்றை உருவாக்கினான். இத்தனைக்கும் துரானியின் படையில் இருந்ததே மொத்தம் 40,000 வீரர்கள்தான். அந்த சமயத்தில் இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு கொண்டிருந்த மராத்தியர்கள் மொத்தமாக அந்த போரில் மடிந்து விழுந்தார்கள். போரை வீண் பெருமைக்காக வென்ற துராணி, நாட்டை அப்படியே போட்டுவிட்டு மீண்டும் கைபர் பகுதிக்கு சென்று விட்டான். மொத்த இந்தியாவும் தலைமை இல்லாமல் தள்ளாடிய போது எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இல்லாமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை எளிதாக பிடித்துக்கொண்டனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் போட்ட சண்டைகள் அனைத்துமே சிற்றரசர்களோடு மட்டும்தான். இந்த சம்பவத்திலிருந்து கைபர் பகுதியில் வசிக்கும் இனக்குழுக்களின் ஆக்ரோஷத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். 

போலன் கணவாய் பகுதி (பலுசிஸ்தான்)

இந்திய துணைக் கண்டத்திற்குள் மற்ற நாட்டினர் நுழைவதற்கு இருந்த இரண்டே நுழைவாயில் கைபர் மற்றும் போலன் தான். அதில் கைபர் கணவாய் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. காரணம் போலன் கணவாய் ஒரு பெரிய சுற்று வழி. ஒரு மிகப்பெரிய பாலைவனத்தை வேறு தாண்டி ஆகவேண்டும். ஆனாலும் அரேபிய பாலைவனத்தில் இருந்து வரும் பயணிகளும் பெரும் படைகளை நகர்த்தி வரும் மன்னர்களும் போலன் கணவாயை பயன்படுத்தி வந்தனர். இன்றும் பாகிஸ்தானின் இட பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள மிகப்பெரிய மாநிலமாக பலுசிஸ்தான் தான் விளங்குகிறது. ஆனால் பாலைவனத்தால் மக்கள் தொகை மிகவும் குறைவு. அங்குள்ள மக்கள் பேசும் மொழி பலுச்சி. அழகான மலை பிரதேசங்களுக்கும் இயற்கை எழில் மிகுந்த இடங்களும் பலுசிஸ்தானில் பாலைவனங்களின் அருகாமையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களும் தனிநாடு கோரிக்கையுடன் பாகிஸ்தானுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். இங்கும் மக்கள் தனி இனக் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். மக்கள்தொகையும் ஜன நெருக்கடியும் குறைவு என்பதால் கைபர் கணவாய் அளவிற்கு இங்கு போராட்டங்கள் எழவில்லை. 

மேற்கண்ட ஐந்து மாநிலங்களை தவிர காஷ்மீரில் மூன்றில் ஒரு பங்கு பகுதியை பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீர் என்ற பெயரில் வைத்துள்ளது. அதைத்தவிர காஷ்மீரில் இருக்கும் இமயமலைச் சாரல் பகுதியான கில்கிட் பகுதியையும் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த கில்கிட் மலைப்பகுதியில் தான் இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் தத்துவம் சார்ந்த அறிவுப் பொக்கிஷங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டு சாரதா (Sharda) என்னும் ஊரில் இருக்கும் மடத்தில் இருந்தது. இந்த அறிவு பெட்டகங்களை சேமிப்பதற்கு சாரதா லிபி எனப்படும் ஒரு வகை மொழி கூட இங்கே உண்டு. இந்தியாவின் மொத்த அறிவும் அங்கே சேமிக்கப்பட்டு இருந்ததால்தான் காஷ்மீரை இந்தியாவின் தலையாய பகுதி என்று கூறுவார்கள்.

பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பையும் அதன் அடிப்படை தகவல்களையும் பார்த்தாகிவிட்டது. சரி. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? நம் புத்தகத்தில், ஆசிரியர் தனது பயணங்கள் மூலமாகவே பாகிஸ்தானின் பல்வேறு சரித்திரத்தை அலசி ஆராய்கிறார். நான் கூறிய இந்த அடிப்படை தகவல்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த புத்தகத்தைப் படித்தால் ஒவ்வொரு நிலப்பரப்பிலும் அவருக்கு ஏற்படும் நிகழ்வுகளை மொத்தமாக புரிந்துகொள்ள நமக்கு மிகவும் ஏதுவாக இருக்கும். 

இப்பொழுது புத்தகத்தின் விமர்சன பகுதிக்கு செல்வோமா?  முதலில் பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் வேண்டும் என்ற எண்ணம் முகம்மது அலி ஜின்னாவுக்கு கிடையாது என்று ஆசிரியர் பதிவு செய்கிறார். அதற்கு அவர் கொடுக்கும் காரணங்கள் என்ன தெரியுமா?

காத்திருங்கள்.

இந்த புத்தகத்தின் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களுடன் இதன் விமர்சனத்தை அடுத்த பகுதியில் கூறி பாகிஸ்தானும் புத்தகமும் எனும் இந்த குறும் தொடர் விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். 

இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

4 COMMENTS

  1. வெறும் புத்தக வாசிப்பாக மட்டுமல்லாமல் பல சுவாரசியமான தகவல்களுடன் அழகான கட்டுரைத்தொடராகச் செல்வது சிறப்பு. பத்தகத்தைத் தேடிப்படிக்கும் ஆர்வம் மேலிடுகிறது.

    • பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  2. கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை. புத்தகத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலை மேலும் அதிகப்படுத்துகின்றன.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -