நான்காம் பரிமாணம் – 96

20. ஒருமை அதிகாரம் - ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். கடந்த பல பகுதிகளாக எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை அதிகாரங்களாக தொகுத்து உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதன் நீட்சியாக இன்று ஒருமை அதிகாரத்தை தொடங்கியிருக்கிறோம். இந்த அதிகாரத்துடன் இந்த பயணத்தின் முதல் புத்தகத்தை நிறைவு செய்து கூடிய விரைவில் வேறொரு புதிய வடிவில் காலத்தின் கண்ணோட்டத்தை உங்களுக்கு தொகுத்து வழங்கவும் இருக்கிறேன். சரி. இறுதி அதிகாரத்திற்குள் நுழையலாமா?

ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமை

நான் மேலே கூறிய மூன்று வார்த்தைகளும் உங்களுக்கு ஒன்று போல் தோன்றுகிறதா? அவற்றில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கிட்டத்தட்ட ஒரே பொருளைக் கொண்டு இருப்பது போலவும் ஒருமை என்பது சற்று மாறுபட்டது போலவும் உங்களுக்குத் தோன்றலாம். உதாரணத்திற்கு, எந்தவொரு குழு அல்லது நாடு எப்பொழுதுமே தன்னுடைய ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளவும் பறைசாற்றிக் கொள்ளவும் முயற்சி செய்கிறது. ஆனால் ஒருமை எனும் வார்த்தை சற்று வினோதமாக ஒருவரது மரியாதையை குறைப்பதற்கும் மற்றொரு உபயோகத்தில் தன்னுடைய நெருக்கத்தை காட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இகழ்வதற்கு ஒருமையில் அழைக்கிறான். தன்னுடைய நெருங்கிய நட்பை ஒருமையில் அழைத்து தோழமை பாராட்டி கொள்ளவும் செய்கிறான். ஆனால் ஒற்றுமை, ஒருமை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய அனைத்து சொற்களும் அடிப்படையில் ஒரே வேர்களிலிருந்து முளைத்தவைதான். ஒன்றாக இணைவது என்னும் இந்த நிகழ்வு உலகத்தில் எவ்வளவு மாற்றங்களை நிகழ்த்துகிறது என்று தெரியுமா? அதைத் தான் இங்கு பார்க்க போகிறோம்.

பிரபஞ்சம் தொடங்கியதிலிருந்து அனைத்துப் பொருட்களும் இருவேறு பிரிவுகளாக தன்னை உருவாக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட அனைத்து மாற்றங்களையும் இருமை அதிகாரத்தில் உங்களுக்கு நான் கூறியிருந்தது ஞாபகம் இருக்கலாம். பெருவெடிப்பின் உருவானது இருமை என்றால் அதற்கு முன் என்ன இருந்தது? அதுதான் ஒருமை. இதைத்தான் ஆங்கிலத்தில் சிங்குலரிடி(Singularity) என்று கூறுகிறீர்கள். இந்த ஒருமைக்கு பின்னால் என்ன இருந்தது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. இதுதான் உள்ளதிலே மிகப்பெரிய பிரபஞ்ச ரகசியம். ஒருமைக்கு முன்னால் என்ன இருந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் ஒருமைக்கும் இருமைக்கும் உள்ள முக்கிய பண்புகளை இங்கே எங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பொருள் இரண்டாக பிரிவதால் அங்கே மாற்றம் என்ற ஒன்றும் உயிர்கள் முதலிய அனைத்து நிகழ்வுகளும் நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியும். ஒரு சிறிய அணு இரண்டாகப் பிரிவதால் அணுப்பிளவு எனும் நிகழ்வு ஏற்பட்டு மிகப்பெரும் சக்தி அணுகுண்டு வெளிப்படுகிறது. ஆனால் இரண்டு அணுக்கள் ஒன்றாக சேர்வதால் என்ன நடக்கிறது தெரியுமா? அணுச் சேர்க்கை ஏற்பட்டு அணுகுண்டை விட மிகவும் அதிகமான பெரும் சக்தி வெளிப்படும். அணு பிளவால் ஏற்படும் சக்தி நச்சுத்தன்மை கொண்ட பல்வேறு கதிரியக்கத்தை வெளிப்படுத்தும். ஆனால் அனு சேர்க்கையால் கிடைக்கும் சக்தி எந்த ஒரு விபரீதமான கதிரியக்கம் இல்லாமல் தூய்மையான சக்தியாக வெளிப்படும். சூரியனிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் சக்தி அணு சேர்க்கையால் கிடைப்பதுதான். அனுப்புற வால் சூரியன் செயல்பட்டால், பூமி போன்ற ஒரு கிரகம் உருவாவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது! 

இருமை என்பது ஒருவிதமான இயக்க சக்தி என்பது தெளிவாக இருக்கும் பொழுது, ஒருமை பல்வேறு இடங்களில் ஜடப்பொருளாகவும், சில இடங்களில் மிகவும் அபரிமிதமான சக்தியாகவும் விளங்குகிறது. ஒருமையில் இருக்கும் இந்த வித்தியாசமான பண்புதான் உங்கள் வாழ்வை சுற்றி பல்வேறு சுவாரஸ்யமான விளைவுகளை உங்களுக்கே தெரியாமல் உருவாக்குகிறது. மனிதன் எனும் உயிரினம் உருவாவதற்கு முக்கிய காரணமே இங்கு தான் ஒளிந்து உள்ளது. அது என்ன என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -