அனல் பறக்கும் நிலத்தில்
என் குழந்தையின் கண்ணீர்
ஆவியாகப் போய்க்கொண்டிருக்கிறது.
சமாளிப்பதற்கு வழி தேடுகிறேன்.
வறண்டு கிடக்கும்
நிலத்துண்டைக் குழைத்து
பொம்மையாக்க வேண்டும்.
முரண்டுபிடிக்காமல் நீ வருவாயா மழையே…
**********
விலகிச் சென்றாலும்
தேடி வந்து நனைக்கும்
மழைச் சாரல் நீ.
விலகுவதற்கு மாறாக
நனைந்து பார்க்கிறேன்.
வெம்மையின் கொடுமையில்
காய்வதைக் காட்டிலும்
கூதளில் நடுங்கிக் கிடப்பதை
சொன்னால் புரியாது
வா சேர்ந்து நனைவோம்!
***********
மழைப் பொழுதொன்றில்
சாளரத்திற்குள்ளே நான்.
கண்ணாடியில் வழியும் நீர்த்துளியாய் நீ.
கலங்காமல் காத்திரு
அடுத்த நிறுத்தம் வரைதானே
இப்பேருந்து
நம்மைப் பிரிக்க முடியும்!