பெருநகர் கனவுகள் – 4

மேகங்களை விற்பவன்

- Advertisement -

மேகங்களை விற்பவன்

எதிர்பார்த்திராத
ஒரு மௌன பொழுதில்
மேகங்கள் விற்பவனைக்
காண நேர்ந்தது.

சப்தமின்றி
மேகங்களுக்குள் பெய்யும்
மழையைப் பற்றி
விவரிக்கத் துவங்கினான்.

மேகங்களை வாங்குபவர்களுக்கு
ஒரு கனவும்
அதனுள் சில மழைத்துளிகளும்
இலவச இணைப்பாகக்
கிடைக்கும் என்றான்.

ஈரப்பசையுடன் இருந்த
அவனது கைகளைக் காட்டி
தான் விற்கும் மேகங்கள்
எப்பொழுதும் மழைப் பொழியும்
எனப் பரவசத்துடன் கூறினான்.

தன் கண்களை
விரித்து அதனுள்
மேகங்கள் திரண்டிருப்பதாக
கிசுகிசுத்தான்.

இந்தப் பெருநகர்
இரைச்சலில்
மேகங்களை விற்பவன்
இனி வரப்போவதில்லை என்றும்
தன்னிடம் இருக்கும்
மேகங்கள் வேறெங்கிலும்
இத்துணைக் கழிவில்
கிடைக்காதென்றும் அரற்றிக் கொண்டே
நடக்கத் துவங்கினான்.

மேகங்களை விற்பவன்
இதுவரை மேகங்களை
விற்றதில்லை.

போவோர் வருவோரிடம்
தன் மேகங்கள்
மழைப் பொழியும்
எனச் சொல்லிக் கொண்டே
தொலைவில் தெரியும்
வெயிலில் கரைகிறான்.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -