பெருநகர் கனவுகள் – 18

இல்லாதவனின் நகரம்

- Advertisement -

இல்லாதவனின் நகரம்

இன்றுடன்
அவன் இல்லாதபோனதை
மறப்பதற்குரிய சுபத்தினம்
தொடங்குகிறது.

அவனது பெயரை
எப்பொழுதாவது நினைவுக்கூர்ந்து
உச்சரிக்கும் நபர்கள்
நகரத்திற்கு வருவது
குறைகிறது.

அவன் சதா உறங்கும்
சிமென்டு நாற்காலியில்
இப்பொழுது ஒரு நாய்
படுத்துறங்கி அவனைப் பற்றிய
கடைசி குறிப்பையும்
அழித்துவிடுகிறது.

அவனைப் பார்த்து
ஹார்ன் அடிக்கும்
ஒரு மோட்டாரோட்டியும்
வேறு நகரத்திற்கு
சென்றுவிடுகிறான்.

அவனை எட்டி உதைத்து
விளையாடிவிட்டுப் போகும்
இளைஞர்களும்
பள்ளிப் படிப்பை
முடித்துவிட்டார்கள்.

அவனுக்குத் தர்மம்
செய்துகொண்டிருந்த சிலரும்
பிறவிப்பலன் பெற்று
இப்பொழுதெல்லாம் அச்சாக்கடையோரம்
வருவதில்லை.

கடைசியாக
அவனைப் பற்றி
ஒரு நினைவை
இக்கவிதைச் சொல்லிவிட்டு
முடிகிறது.

இத்துடன்
அப்படியொருவன் இருந்தான்
என்பது மறக்கப்படும்.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -