சகடக் கவிதைகள் – 38

காண முடியாத கண்கள்

- Advertisement -

காண முடியாத கண்கள்

கண்ணால் கண்டதை மட்டுமே
கருத்தாய் ஏற்க முடியுமென்றும்

காணாத விஷயங்கள்
கட்டுக்கதைகளே என்றும்
கடுமையாக விவாதம் செய்தான்

கண்களே இருந்தாலும்
கண்ணாடியின் உதவியின்றி – யாரும்
காணமுடியாதே தன் முகத்தை

தொட்டுப் பார்த்து
தெரிந்து கொள்வேன்

காற்றை எவ்வாறு தொடுவாய்
காற்றில் மிதந்து வரும்
மணத்தை எவ்வாறு தொடுவாய்

நுகர்வதால் தெரியாதோ மணம்?
உணர்வதால் தெரியாதோ காற்று?

அருகிலேயே இருந்தாலும்
அண்டை மனிதரின் பசியை
உணர்ந்திட முடியுமோ ?

காதலியாகவே இருந்தாலும் அவள்
கண்ணீரின் சூட்டை
உணர்ந்திட முடியுமோ?

கேள்விக்கு பேச்சற்று நின்றான்
குறுகிய பார்வை – காண்பவனின்
குறையே அன்றி வேறென்ன?

மேகத்தைப் பிரியாத மழைத்துளி
கடலின் ஆழத்தை உணருமோ?

ஜன்னலின் வழி தெரியும் உலகம்
சதுரமாய் தோன்றாதோ?

காண்பதை மட்டுமே நம்புபவன்
கானல் நீரைப் பருக
காலம் முழுவதும் காத்திருப்பான்


தொலைதூர விண்மீனோ
தொடும்தூர கூழாங்கல்லோ
அதுவாக ஆக முடிந்தவனே
காணாததைக் காணும்
கண்களைப் பெற்றவன்

இருட்டையே பார்ப்பவனின் காதுகளில்
வெளிச்சத்தைப் பற்றிய வர்ணனைகள்
வீணான விதண்டா வாதங்களன்றோ ?

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -