மின்கிறுக்கல்

யமுனா வீடு

PC: ஓவியர் துரைஎழிலன்

கடந்த சில நாள்களாக
யமுனா
நலங்குன்றி இருக்கிறாள்
யாருடனும் பேசுவதில்லை
பழச்சாறை மட்டும் குடித்துக்கொண்டிருந்தவள்
தற்போது தண்ணீர் போதுமென்கிறாள்
இடையிடையே கண்விழித்துப்
பழங்கதைகளைப் பேசுகிறாள்
சற்று நேரத்திற்குப் பிறகு
நாளை நடப்பதைக் குறிப்பெடுக்கச் சொல்கிறாள்

இப்போதைக்கு
யமுனா
ஏற்றிவைத்த மெழுகுவத்தியாக இருக்கிறாள்
இரவும் பகலும் ஒன்றாகிப்போகும் நாளொன்றில்
யமுனா
முன்னைப்போல பறந்து செல்லலாம்

அவளின் சிறகசைப்பில்
உதிர்ந்து விழும் இறகொன்றைப்
பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும்
காலத்தில் நானிருக்கிறேன்.

Exit mobile version