மின்கிறுக்கல்

யமுனா வீடு

யமுனா
ஒருமுறை அழைத்தாள்
ஒன்றைப் பற்றிச் சொல்ல.
மறுமுறையும் அழைத்தாள்
இன்னொன்றைப் பற்றி
அவங்க அப்படிச்சொல்லிட்டாங்க
என்று மகிழ்ந்து என்னையும் மகிழ்த்திக்கொண்டிருப்பாள்

உனக்கொரு
மகிழ்ச்சியைத் தருகிறேன் என்று
மூடிய கைகளை விரித்துக் காண்பிப்பாள்.
பட்டாம்பூச்சியா பறக்கப்போகிறது?
என்றிருந்த எனக்கு
மருதாணிப் புள்ளியாய்ச் சிரிப்பாள்.

ஏய் என்ற அவளின் குதூகலத்தில்
என்னவென்று புரிவதற்குள்
அவள் பேச்சாய் இழுத்துச்செல்வாள்.

இப்படித்தான் ஒவ்வொருநாளும்
பல மகிழ்ச்சி அவளுக்கு
அதில் ஒன்றாய் எனக்கு
வண்ணங்களை மடித்துக் காண்பிப்பாள்

Exit mobile version