மின்கிறுக்கல்

யமுனா வீடு – 22

கடல் நீரை அள்ளிப் பருகி
பெருவெளியில்
ஒரு வசைச்சொல்லை பொறுமையாக உதிர்த்த யமுனா
குறுஞ் சிரிப்போடு
அருகில் கவனித்தவர்களைப் பார்கிறாள்
மேகத்திலிருந்து மழை தூரத்தொடங்கியதைப்போல
களைந்து செல்லத் தொடங்குகிறார்கள்
தனித்து விடப்பட்டவளுக்கு
ஒரு நம்பிக்கையாக
தொலை தூரத்திலிருந்து வந்த பறவையொன்று
அங்கமர்கிறது
நம்பமுடியாதவளாக
குழந்தைதனத்தோடு பறவையை விரட்டி ஓடுகிறாள்
அந்தப்பறவை தத்தி தத்தி
கடற்கரையெங்கும் யமுனாவை ஓடச்செய்ய
முடிவற்ற அன்பினை அலை தொட்டுச் சென்றதை
வளரும் நிலா பார்த்துக் கொண்டிருந்தது
உயிர்பிரிக்கும்
அன்பு கடலளவு

Exit mobile version