மின்கிறுக்கல்

பெருநகர் கனவுகள் – 10

சுவர் ஓவியங்கள்

வரைந்து முடிக்கப்படாத
சுவரோவியங்களின்
ஒழுங்கற்ற கோடுகளைக்
கவனித்துக் கொண்டிருக்கிறது
வெளிச்சம் மங்கிய
சாலை விளக்கு.

கிளையென நினைத்து
வந்தமர்ந்த
பறவையின் கோணலை உணராது
அசைவுற்று நின்றிருந்தது
மாயமரம்.

ஆளரவமற்றுப்போன
காலிச்சுவர்களில்
நிழல்கள் சாய்த்துக்கிடந்தன
எப்பொழுதோ வரையப்பட்டு
ஆயுள் முடிந்துபோன
வழிபோக்கர்களின் ஓவியங்கள்.

தூரத்தில் பார்க்கும்
சன்னாசி கிழவனின் கண்களில்
முழுமையடையாத ஓவியங்களின்
கூட்டுச்சதியாய்
விரிகிறது இரவு.

-கே.பாலமுருகன்

Exit mobile version