மின்கிறுக்கல்

சூர்யப்பாவை

இரவின் அடர்த்தியைப்
போர்த்திக்கொண்டு
கடற்கரையின் ஈரமெத்தையில்
அமர்ந்திருக்கிறேன்.
கடலின் பேரிரைச்சல்
எனக்குள் பேரமைதியைக்
கொஞ்சம்கொஞ்சமாய்
ஊட்டுகின்றது.

இத்தனை பெரியகடலில்
தனிமையைக் கரைக்கவியலாது
தவிப்புறுகிறேன்.
மணலைப்போல துகள்களாய்
உடைந்துபோகிறேன்..

அமைதிக்குள் அலைப்புறுதலைப்
பொதிந்து மறைத்து
என்னை நானே ஏமாற்றுகிறேனா?
இந்தக் காத்திருப்பு எதற்காக?
ஒவ்வொரு அலையும் உரக்கச்
சொல்லிச் செல்கின்றது
வாழ்வின் தொடர்தலை.
எங்கே எப்படித் தொடர்வது?
யார் உடன் வருவார்?

இதோ.. இருள்கிழித்து
எனைநோக்கி வருகிறது
தழுவுதலின் கீற்று ஒன்று.
அவ்வொற்றைக் கீற்றுதானே
என் உயிரோலை ..
அதில் நம்பெயரை எழுதியது
நீலக்கடல்..!
அக்கீற்றெங்கும் ஒட்டியிருக்கிறது
பசுமையின் மணம்..
பசுங்காதலின் மணம்..
சூர்யாவின் மணம்…!

Exit mobile version