மின்கிறுக்கல்

உயர்மட்ட சந்திப்பு

படியில் ஏறுகையில்
செம்பருத்தி கேட்டது
‘ரொம்ப நாளாக ஆளைக் காணம்’
‘மழையினால் வரவில்லை’
பதிலுரைத்தேன்
‘கண்ணுலயே நிக்குது’
என்றது கொய்யா
‘மூணாவது வரிசையில்
தக்காளியைப் பாருங்க
தாகத்தில தவிச்சிக் கெடக்குது’
என்றது வயசாளி வெண்டை
பீர்க்கைக் கொடி
உடம்பைச் சுற்றி
உதறினாலும் விடவில்லை
இவைகளின் குரல்
எனக்கு மட்டும் கேட்கிறதா
ஜகதீஷ் சந்திர போஸ்
சொன்னது சரிதானோ
நீர் பாய்ச்சியபின்
நாளை பார்க்கலாம்
என்றதுடன்
இன்றைய சந்திப்பு
இனிதே முடிந்தது

Exit mobile version