மின்கிறுக்கல்

யமுனா வீடு

PC: ஓவியர் துரைஎழிலன்

வாரத்தில் ஏதேனும் ஒருநாளில்
யமுனாவோடு உரையாடுவது
வாசுவிற்கு பிடிக்கும்
கடந்த வாரத்தில் வாசித்த அத்தனை கதைகளையும்,
கவிதைகைளையும்
வாசு ஒப்பித்தபடி இருப்பான்.
இறகொன்றால் காதைக் குடைந்தும்
வாசு வாங்கிகொடுத்த சித்திரப் புத்தகத்தில் கோடிட்டபடியும்
பிடித்தமான பொரிஉருண்டையை வைத்து விளையாடியபடியும்
கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும்
வாசுவின் கதையை
ஒரு நேரத்தில் நிறுத்தச்சொல்கிறது
உச்சஸ்தாபியில் எழும் யமுனாவின் குரல்
மழைக்காலப் பாடலொன்றின் பெரும் பிளிறலாக
காற்று வெளியெங்கும் வெடித்துச் சிதறும்
யமுனாவின் குரலே
அடுத்த வாரத்தில் இன்னும் சில கதைகளை வாசிக்கச்செய்கிறது.

Exit mobile version